
பச்சோந்தி போல நிறம் மாறக்கூடிய சேலை அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
திருப்பதி: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் நல்ல விஜய். இவர் விதவிதமான சேலைகளை தயாரித்து வருகிறார். கடந்த காலங்களில் இவர் மணம் வீசக்கூடிய சேலைகளை தயாரித்தார். இதற்காக மூலிகைகளைப் பயன்படுத்தினார்.
மேலும் ஊசி முனையில் நுழையக்கூடிய புடவை ஒன்றையும் உருவாக்கிச் சாதனை படைத்தார். இந்த நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இவரிடம் பச்சோந்தி போல நிறம் மாறக்கூடிய சேலை செய்ய அணுகினார்.
இதனைத் தொடர்ந்து விஜய் ரூ.2.80 லட்சம் செலவில் நிறம் மாறக்கூடிய சேலை ஒன்றை தயாரித்தார். இந்தச் சேலையை தயாரிக்க 30 கிராம் தங்கம் மற்றும் 500 கிராம் வெள்ளியை உருக்கிக் கலவையாகச் சேர்த்துள்ளார். பகல், இரவு மற்றும் மின் வெளிச்சத்திற்கு ஏற்றபடி இந்தப் புடவை 3 விதமான நிறங்களில் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும் எனத் தெரிவித்தனர்.
பச்சோந்தி போல நிறம் மாறக்கூடிய சேலை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அவரிடம் தொழிலதிபர் ரூ.2.80 லட்சம் கொடுத்துச் சேலையை பெற்றுக் கொண்டார். விஜய் தற்போது ரூ.25 லட்சம் மதிப்பில் ஒரு சேலையை நெசவு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.


