
கோஹிமா: ”அசாமில் ஊழல் நிறைந்த அரசு ஆட்சி நடத்துகிறது” எனக் காங்கிரஸ் எம்.பி ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
லோக்சபா தேர்தலையொட்டி, மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இரண்டாம் கட்ட ‘பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை’யைக்காங்கிரஸ் எம்.பி., ராகுல் கடந்த ஜன.,14ம் தேதி மணிப்பூரில் துவக்கினார். இன்று(ஜன.,18) 5வது நாள் அசாம் மாநிலத்தில் சிவசாகர் மாவட்டத்தில் யாத்திரை மேற்கொண்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் ராகுல் பேசியதாவது: நாங்கள் மணிப்பூரிலிருந்து பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை துவக்கினோம். இந்த யாத்திரை இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களையும் சாதிகளையும் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டது. பா.ஜ., பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக நாட்டு மக்களுக்கு நிறைய அநீதி இழைத்துள்ளது.
நாடக ஆசிரியரும், சீர்திருத்தவாதியுமான சங்கர்தேவ் அனைவரையும் ஒன்றிணைக்க முயன்றார். அவர் அநீதிக்கு எதிராகப் போராடினார். இதனைத் தான் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மணிப்பூரில் உள்நாட்டு போர் சூழல் நிலவுகிறது. ஆனால், பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லவில்லை. நாகாலாந்தில் பிரதமர் அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது என்று மக்கள் கேட்கின்றனர். அசாமில் ஊழல் நிறைந்த அரசு ஆட்சி நடத்துகிறது. இவ்வாறு ராகுல் பேசினார்.



