
சண்டிகர்: ராணுவத்திற்கு ‘அக்னிவீர்’ திட்டம் தேவையில்லை. இது பிரதமர் அலுவலகத்தால் உருவாக்கப்பட்ட திட்டம் எனக் காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறினார்.
ஹரியானா மாநிலம் மகேந்திரகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: விவசாயிகளின் கடனை நரேந்திர மோடி தள்ளுபடி செய்யவில்லை. அதானி, அம்பானி போன்ற கோடீஸ்வரர்களின் கடனைத் தள்ளுபடி செய்துள்ளனர். இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தபின் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யும்.பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையின்போது, பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின் பிரச்னைகள்பற்றிக் கேட்டறிந்தேன்.
‘அக்னிவீர்’ திட்டம்
ஆனால் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், விவசாயிகளின் பிரச்னைகள்குறித்து ஊடகங்களில் செய்தி வெளியிடுவதில்லை. ராணுவத்திற்கு ‘அக்னிவீர்’ திட்டம் தேவையில்லை. இது பிரதமர் அலுவலகத்தால் உருவாக்கப்பட்ட திட்டம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன், இந்தத் திட்டத்தைக் குப்பை தொட்டியில் வீசும். இவ்வாறு ராகுல் பேசினார்.
நிலக்கரி ஊழல்
தரம் குறைந்த நிலக்கரியை இந்தோனேசியாவில் கொள்முதல் செய்து, உயர்தர நிலக்கரி என்ற பெயரில் 3 மடங்கு அதிக விலைக்கு 2014ல் தமிழக அரசுக்கு அதானி நிறுவனம் விற்றுள்ளது. 2014ல் அதிமுக ஆட்சியின்போது நிலக்கரின் விலை, தரத்தை உயர்த்தி காட்டுவதற்கு பல்வேறு நாடுகள் வழியாக வருவது போல் அதானி நிறுவனம் போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேடு செய்துள்ளது எனத் தனியார் செய்தித்தாள் நிறுவனம் கட்டுரை வெளியிட்டு இருந்தது.
ஜூன் 4ம் தேதிக்குப் பின் விசாரணை
இதுகுறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ராகுல் கூறியிருப்பதாவது: அதானி ஊழல் வழக்கில், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., மற்றும் ஐ.டி உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் அமைதியாக இருக்க எத்தனை டெம்போக்கள் பயன்படுத்தப்பட்டன?. தரம் குறைந்த நிலக்கரியை அதானி 3 மடங்கு அதிக விலையில் விற்று ஊழல் செய்திருக்கிறார்.
அதிக விலையில் நிலக்கரியை விற்றதால் பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளார். ஜூன் 4ம் தேதிக்குப் பின் ஆட்சி அமைக்க உள்ள இண்டியா கூட்டணி அரசு நிலக்கரி ஊழலை விசாரிக்கும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.


