
தமிழகத்திற்கு நீட் விலக்கு தர வேண்டிய சூழல் மத்திய அரசுக்கு ஏற்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை:சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“நீட் விவகாரம் தொடர்பாக 4 முறை மத்திய அரசு தரப்பிலிருந்து தமிழக அரசிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்குப் பதில்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நாம் தகுந்த விளக்கங்களைக் கொடுத்திருக்கிறோம்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு ஏன் விலக்கு வேண்டும்? என்பதற்கான காரணங்களை நாம் விளக்கியிருக்கிறோம். நீட் விலக்கு மசோதாவிலும் அதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். தமிழக முதல்-அமைச்சரும் இதனைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். எனவே, தமிழகத்திற்கு நீட் விலக்கு தர வேண்டிய சூழல் மத்திய அரசுக்கு நிச்சயம் ஏற்படும்.”இவ்வாறு அவர் தெரிவித்தார்.



