
இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி வென்றுள்ளார்.
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற எல்லோபிரேகாட் ஓபனில் 2 வெற்றிகளைப் பதிவு செய்ததன் மூலம் இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைத் தமிழ்நாடு செஸ் வீராங்கனை வைஷாலி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் தமிழக வீராங்கணை என்ற சாதனையைப் பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் வைஷாலி 2500 புள்ளிகளைக் கடந்ததன் மூலம் இந்திய அளவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் மூன்றாவது வீராங்கணையாகச் சாதனையைப் படைத்துள்ளார்.
இதனிடையே விஷாலிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகத் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட்மாஸ்டர் மற்றும் தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனதற்கு வைஷாலிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! 2023 உங்களுக்குச் சிறப்பாக அமைந்துள்ளது.
உங்கள் சகோதரர் பிரக்ஞானந்தாவுடன் இணைந்து, #கேண்டிடேட்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் சகோதரி-சகோதரர் இணையர் என்ற சிறப்பைப் பெற்று நீங்கள் வரலாறு படைத்தீர்கள். இப்போது மேலும் பெருமை சேர்க்கும் வகையில், நீங்கள் முதல் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற உடன்பிறப்புகளாக மாறியுள்ளீர்கள். உங்கள் சாதனைகள்குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். உங்கள் குறிப்பிடத் தக்க பயணம் செஸ் ஆர்வலர்களுக்கு ஒரு உத்வேகமாகவும், நமது மாநிலத்தில் பெண்கள் அதிகாரம் பெற்றதற்கான எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.


