
புதுச்சேரி கடற்கரையில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட பழங்குடியின பெண் குழந்தையைக் காரைக்கால் போலீசாரால் மீட்டனர். துரிதமாகச் செயல்பட்ட காவல்துறைக்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பாராட்டுதெரிவித்தார்.
புதுச்சேரி லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி, இவர் தனது மனைவி விஜயலட்சுமியுடன் கடற்கரை சாலையில் நேற்று (14.02.2024) இரவுப் பொம்மை விற்று கொண்டிருந்தபோது, அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மாயமானது. குழந்தையின் பெற்றோர் கடற்கரையில் பல இடங்களில் அலைந்து தேடியும்குழந்தை கிடைக்கவில்லை. பதற்றத்துடன் குழந்தையின் பெற்றோர் பெரியக்கடை காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர்.
போலீசார் கடற்கரை சாலை உள்ளிட்ட பல இடங்களில் குழந்தையைத் தேடி சென்று விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் இன்று மாலை புதுச்சேரியிலிருந்து கடத்திவரப்பட்ட குழந்தை காரைக்காலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதனை அடுத்து போலீசார் குழந்தையைத் தேடும் பணியைத் தீவிர படுத்தினர்.
காரைக்கால் புதிய பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் குழந்தையுடன் ஒருவர் பேருந்திலிருந்து இறங்கி ஆட்டோவில் ஏறிச் செல்வது தெரியவந்தது.
இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு தரப்பிடம் விசாரணை மேற்கொண்ட காரைக்கால் போலீசார் துரிதமாகச் செயல்பட்டு குழந்தையை மீட்டனர். இதனை அடுத்து குழந்தையை வைத்திருந்த பெண் ஒருவரை தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் புதுச்சேரியில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட வில்லியனுர் மூர்த்தி, ஆகாஷ் என்ற இரண்டு நபர்களைப் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தெரிந்த 24 மணி நேரத்திற்குள் காணாமல் போன குழந்தையை மீட்டக் காரைக்கால் காவல்துறைக்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மணிஷ் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.


