Puducherry Child Murder: முக்கிய குற்றவாளி தற்கொலை முயற்சி!

Advertisements

புதுச்சேரியில் சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான விவேகானந்தன் சிறையில் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் 9 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் புதுச்சேரி மட்டுமல்லாது தமிழகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கக் கோரியும் புதுவையில் எதிர்க்கட்சிகள், அதிமுக சார்பில் முழு அடைப்பு சட்டமன்றம் முற்றுகை, ஆளுநர் மாளிகை முற்றுகை உள்ளிட்ட பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன், கருணாஸ் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர்கள் சிறப்பு நீதிமன்றத்தின் மூலம் 1 வாரத்தில் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட விவேகானந்தனும், கருணாசும் காலாப்பட்டு மத்திய சிறையின் தனி செல்லில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் விவேகானந்தன் சிறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனைப் பார்த்த சக கைதியான கருணாஸ் சத்தம் போட்டதும், பணியில் இருந்த சிறை வார்டன் ஓடி வந்து விவேகானந்தனை காப்பாற்றி எச்சரித்தார். தொடர்ந்து விவேகானந்தன் காவல் துறையினரின் நேரடி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே கைது செய்யப்பட்டுள்ள இருவரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி, முத்தியால்பேட்டை போலீசார் இன்று நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *