
Crime In Tamil Nadu: மாணவர்கள் வேறு துறைக்கு மாறிச் செல்ல ஐந்தாயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சமாக ஜிபே (Gpay) மூலம் பெற்ற பேராசிரியர்.
Today Tamil Nadu News: உதகை அரசுக் கலை கல்லூரியில் மாணவர்கள் வேறு துறைக்கு மாறுதல் பெற 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை பேராசிரியர் லஞ்சம் பெற்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சம்பவம்குறித்து கோவை மண்டல கல்லூரி கல்வியில் இணை இயக்குனர் 4 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு கலைக் கல்லூரி நூறு ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் மலை மாவட்டத்தைச் சார்ந்த மாணவர்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களைச் சார்ந்த மாணவர்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் இக்கல்லூரியில் பணியாற்றும் சில பேராசிரியர்கள் போலி சான்றிதழ்மூலம் பணியில் சேர்ந்ததாகக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சை எழுந்தது. அதனைத் தொடர்ந்து சில பேராசிரியர்கள் பெண் பேராசிரியர்களுக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாகப் புகார் எழுந்தது. அது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தற்போது துறை மாறுதல் பெற லஞ்சம் வாங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாகக் கல்லூரியில் பணியாற்றும் தாவரவியல் துறையைச் சார்ந்த ரவி என்ற பேராசிரியர் சில மாணவர்களிடம் தற்போது சேர்ந்துள்ள துறையிலிருந்து வேறு துறைக்கு மாறிச் செல்ல ஐந்தாயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சமாகப் பெற்றது தெரியவந்துள்ளது. அதற்கான தொகைகளை மாணவர்களிடமிருந்து ஜிபே (Gpay) மூலமும் பெற்று இருப்பதற்கான ஆதாரங்களும் மாணவர்களிடம் அவர் பேசிய ஆடியோக்களும் வெளியாகி உள்ளது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் அது சம்பந்தமாக மாணவர்கள் முதல்வரின் தனி பிரிவுக்கும் புகார் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து புகார்குறித்து விசாரணை நடத்துமாறு தமிழக உயர்கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வியியல் இயக்குனர் ஆகியோர் கோவை மண்டல கல்லூரி கல்வியல் இணை இயக்குனருக்கு உத்தரவு பெற்றுள்ளனர்.
இதனை அடுத்து நேற்று உதகைக்கு வந்த கோவை மண்டல கல்லூரி கல்வியில் இணை இயக்குனர் கலைச்செல்வி சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியரிடம் நான்கு மணி நேரம் விசாரணை நடத்தினார். அவர் விசாரணை அறிக்கையை இரண்டு நாட்களுக்குள் உயர் கல்வித் துறை செயலாளர் மற்றும் கல்லூரி கல்வியியல் துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.



