
போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, வாடிகனுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
கத்தோலிக்க திருச்சபையின் 266-ஆவது போப் ஆண்டவரான போப் பிரான்சிஸ், வயது முதிா்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானாா். போப் பிரான்சிஸுக்கான இறுதிச் சடங்கை புனித பீட்டா் சதுக்கத்தில், நாளை காலை 10 மணிக்கு நடத்தப்படவுள்ளது. இதில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த நிலையில், இந்தியா சார்பில் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, டெல்லியில் இருந்து வாடிகனுக்கு இன்று காலை புறப்பட்டுச் சென்றுள்ளார். அவருடன் நாடாளுமன்றம் மற்றும் சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர். இதனிடையே, போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறுவதையொட்டு அன்றைய தினம் நாடு முழுக்க துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதிலும் அனைத்து அரசு கட்டிடங்களிலும் உள்ள தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




