Pongal Festival 2024: தமிழகம் முழுவதும் மக்கள் உற்சாக கொண்டாட்டம்!

விடிகாலையிலேயே பெண்கள் தங்கள் வீடுகளில் பல வண்ண கோலங்களை போட்டு பொங்கல் பண்டிகையை வரவேற்றனர்.

தமிழ் மக்களின் கலாசார பண்பாட்டு வரலாற்றில் பொங்கல் பண்டிகைக்கு என்று தனி இடமே உண்டு. இயற்கை தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் மக்கள் தங்கள் நன்றியினை உரித்தாக்கும் விதமாகவே இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பொங்கலை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே கடைத்தெருக்கள், சந்தைகளில் கூட்டம் நிறைந்து வழிந்தது. இன்று பூஜைக்கு தேவையான கரும்பு, மஞ்சள்செடி, பூசணிக்காய் போன்றவற்றை நேற்றே வாங்கி வைத்துக்கொண்டனர்.

விடிகாலையிலேயே பெண்கள் தங்கள் வீடுகளில் பல வண்ண கோலங்களை போட்டு பொங்கல் பண்டிகையை வரவேற்றனர். அதேபோல விருந்தினர்களை வரவேற்கும் வகையில் வீட்டு வாசலில் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.

மக்கள் காலையிலேயே குளித்து முடித்து புத்தாடைகளை அணிந்து கொண்டனர். பிறகு புதுப்பானையில் புத்தரிசியிட்டு சர்க்கரை பொங்கல் வைத்தனர். அப்போது பொங்கல் பொங்கும்போது பொங்கலோ பொங்கல் என்று உற்சாக குரல் எழுப்பினர். இதையடுத்து மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

இதேபோல் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், பல்வேறு கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளுடன் பொங்கல் விழாக்கள் இன்று நடைபெற உள்ளது. பொது வெளியில் மக்கள் ஒன்றுசேர்ந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் இந்த திருவிழாக்கள், சமத்துவத்தை உலகிற்கு உணர்த்துவதாக உள்ளன.

பொங்கல் பண்டிகை என்பதால், கோயில்களிலும் மக்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். இதனால் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து வழிகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *