
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் களை கட்டிய பொங்கல் திருவிழாவில் அரசு அலுவலர்கள் பொங்கல் வைத்து உறியடி, கயிறு இழுத்தல் போன்ற போட்டிகளில் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்ற பொங்கல் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கலந்துகொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் அரசு அலுவலர்கள் ஒன்று கூடி மண்பானையில் பொங்கல் வைத்துப் பொங்கலோ பொங்கல் என்று கூறி வழிபாடு நடத்தினர். பின்னர் நடைபெற்ற உறியடி போட்டியில் கடலூர் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், மற்றும் வட்டாட்சியர்கள், மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உறியடித்து மகிழ்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து மியூசிக்கல் சேர், கயிறு இழுக்கும் போட்டி, கோலப்போட்டியெனப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் அலுவலர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.


