bjp:ஒரே துறையைக் குறிவைத்துக் கேட்கும் கூட்டணிக் கட்சிகள்.. பா.ஜ.க.வுக்கு கடும் நெருக்கடி!

Advertisements

பா.ஜ.க. ஆட்சியமைக்க கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தபோதும், சில நிபந்தனைகளை விதித்துள்ளன.

புதுடெல்லி:நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால், ஆட்சியமைக்க தேவையான 272 என்ற எண்ணிக்கையைவிட 32 தொகுதிகள் குறைவாக உள்ளது. எனினும், தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது.

பெரும்பான்மையை பெற பா.ஜ.க. தவறிய நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நிதீஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவர் தலைமையிலான கட்சிகளின் ஆதரவு தேவையாக உள்ளது. அவர்கள், கூட்டணிக்குத் தங்களுடைய முழு ஆதரவை தெரிவித்து உள்ளனர்.

எனினும், மத்தியில் பா.ஜ.க. ஆட்சியமைக்க கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தபோதும், சில நிபந்தனைகளை விதித்துள்ளன. இதன்படி, போக்குவரத்து, ஐ.டி., வேளாண்மை, ஊரக வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் நீர்வள துறை போன்றவற்றை தரும்படி கூட்டணி கட்சிகள் கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக வேளாண் துறையை மட்டும் 3 கட்சிகள் கேட்டு வருகிறது. வேளாண் துறை மந்திரி பதவியைத் தனக்கு வழங்க வேண்டும் என 2 எம்.பி.க்களை மட்டுமே கொண்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி பா.ஜ.க.வுக்கு நிபந்தனை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வேளாண் துறையை ஏற்கனவே தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் கேட்டு வருகின்றன. இதனால் பா.ஜ.க.வுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *