
புதுடில்லி: பண மோசடி வழக்கில் ஜாமினில் வெளிவந்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், இன்று (ஜூலை 15) பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.
ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவி வகித்த ஹேமந்த் சோரன், பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவதற்கு முன்பாக, கடந்த ஜனவரி 31ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, சம்பய் சோரன் முதல்வராகப் பதவியேற்றார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹேமந்த் சோரனுக்கு ஜூன் 28ல் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, சிறையிலிருந்து வெளியே வந்த ஹேமந்த் சோரன், ஜூலை 4ம் தேதி ஜார்க்கண்ட் முதல்வராக 3வது முறையாகப் பதவியேற்றார்.
இண்டியா கூட்டணியைச் சேர்ந்தவர்
நேற்று முன்தினம் (ஜூலை 13) ஹேமந்த் சோரன் மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவை சந்தித்தனர். மரியாதை நிமித்தமாகச் சந்தித்ததாகக் கூறினர். இந்த நிலையில், இன்று, டில்லியில் பிரதமர் மோடியை ஹேமந்த் சோரன் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது, மாநில பிரச்னைகள் மற்றும் நிதி பகிர்மானம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இண்டியா கூட்டணியில் இடம்பெற்றும் ஹேமந்த் சோரன், சிறையிலிருந்து வெளிவந்தபிறகு முதன்முறையாகப் பிரதமர் மோடியை சந்தித்திருப்பது அரசியலில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.




