
கடலூர் செம்மங்குப்பத்தில் சுரங்கப்பாதை அமைக்கத் தென்னக ரயில்வே முன்வந்தும் மாவட்ட ஆட்சியர் அதற்கு அனுமதி அளிக்காததே விபத்துக்குக் காரணம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பை மேற்கோள் காட்டியுள்ளார். அதில் செம்மங்குப்பத்தில் சுரங்கப்பாதை அமைக்கத் தென்னக ரயில்வே ஒப்புதல் அளித்து அதற்கான முழு நிதியையும் தானே தருவதாகவும் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் கடந்த ஓராண்டாக இத்திட்டத்திற்கு அனுமதி தரவில்லை என்று தென்னக ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் செந்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளதை மேற்கோள் காட்டியுள்ளார்.
முதலமைச்சரும், அமைச்சர் பன்னீர்செல்வமும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத்தும் என்ன செய்துகொண்டிருந்தனர்? என்று பழனிச்சாமி வினவியுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அனுமதி கொடுத்திருந்தால், அந்த இடத்தில் சுரங்கப்பாதை கட்டப்பட்டிருக்கும். உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.



