
புதுடெல்லி: தேர்தலுக்குப்பின் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைத்தால் இந்திய வரைபடமே மாறிவிடும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் எச்சரிக்கை எடுத்திருக்கிறார்.
ஏற்கனவே இவர் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் நிதி நன்கொடை பத்திர ஊழல் குறித்து கடுமையான கருத்து தெரிவித்து இருந்தது நினைவு கூரத் தக்கது.
இந்த நிலையில் பிரபல பொருளாதார நிபுணரான பிரபாகரின் தற்போதைய பேட்டி ஒன்றை காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளது.
அதில், “இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைந்தால் இந்தியாவின் வரைபடம் மாறிவிடும். அதேபோல் லடாக் மற்றும் மணிப்பூரில் ஏற்பட்டுள்ள நிலைமை நாடு முழுவதும் ஏற்படும்” என்று அவர் கூறியிருக்கிறார்.
அத்துடன் “அதன் பிறகு தேர்தல் என்பது இந்தியாவில் நடைபெறாது” என்றும், அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். “இந்தியாவின் வரைபடம் மட்டுமல்ல அரசியல் அமைப்பு சட்டமும் மாறிவிடும்” என்றும் அவர் அந்த பேட்டியில் அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், “பாகிஸ்தானுக்கு செல்ல விரும்புபவர்கள் போகலாம் என்பது போன்ற வெறுப்பு பேச்சுகளை தற்போது டெல்லி செங்கோட்டையிலிருந்தே பிரதமர் மோடியும் பாஜக தலைவர்களும் முழங்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட
மோதலைப் போல் நாடு முழுவதும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகும்” என்றும் தாக்குதல் தொடுத்திருக்கிறார்.
ஏற்கனவே கடந்த மார்ச் மாதத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பாஜகவின் தேர்தல் நன்கொடை பத்திர ஊழல் இந்தியாவில் மட்டுமின்றி உலகத்திலேயே நடந்துள்ள மிகப்பெரிய ஊழல் என்றும், தற்போதைய சூழ்நிலைபோட்டி என்பது இரண்டு கூட்டணி கட்சிகளுக்கு இடையே அல்ல; பாஜகவுக்கும் நாட்டு மக்களுக்கும் இடையே நடைபெறும் போட்டி” என்று அவர் கருத்து தெரிவித்து இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய தாக்குதலை அவர் தொடுத்திருக்கிறார்.


