
பல்லடம் படுகொலை சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளி உட்பட 2 பேர் காவல் நிலையத்தில் சரண் அடைந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த தவிடு புண்ணாக்கு வியாபாரம் செய்து வந்த 47 வயதான செந்தில் குமாரின் வீட்டின் முன்பு நேற்று முன் தினம் இரவு 3 பேர் கொண்ட கும்பல் மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைச் செந்தில் குமார் தட்டிக் கேட்ட நிலையில், அதன் காரணமாக ஆத்திரமடைந்த அக்கும்பல் செந்தில் குமாரை முதலில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளது.
இந்தக் கொடூர சம்பவத்தின்போது, தடுக்க சென்ற செந்தில் குமாரின் தம்பி மோகன்ராஜா, அவருடைய தாய் புஷ்பவதி, சித்தி ரத்தினாம்பாள் ஆகியோரையும் அந்தக் கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் விசாரணையில் ஆறு மாதத்திற்கு முன்பு பணம் பிரச்சினை தொடர்பாகச் செந்தில்குமாருக்கும், 34 வயதான வெங்கடேஷ் என்பவருக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரிடமிருந்து தப்பி ஓட முயன்றபோது அவருக்குக் காலில் முறிவு ஏற்பட்டது.
இந்நிலையில் இந்தப் படுகொலை சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளி உட்பட் 2 பேர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் மற்றும் சோனை முத்தையா ஆகியோர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இவர்கள் இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப் போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


