
சாலை விபத்தில் 3 இளைஞர்கள் துடிதுடித்து உயிரிழந்த சோகம்!
பல்லடம் அருகே லாரிமீது கார் மோதி விபத்துக்குள்ளான விபத்தில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் பூபாபலன் (22), நிதிஷ் (23), பிரேம்குமார் (23). இவர்கள் 3 பேரும் நாமக்கலிலிருந்து பொள்ளாச்சி நோக்கிக் காரில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது கேரளாவிலிருந்து இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் நோக்கி அருகே மாதப்பூர் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாகக் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் பள்ளத்தில் பாய்ந்து அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 இளைஞர்களும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உடனே இந்த விபத்துகுறித்து அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காகப் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

