
பழனியில் முருகன் மாநாடு நடத்தியதற்கு இது வரை செலவுக் கணக்கு காட்டாத அமைச்சரை எப்படிச் சொல்லலாம்? என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வினவியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் துவாதசி அறக்கட்டளைக்குச் சொந்தமான 12 ஏக்கர் நிலத்தைத் தனியாள் ஒருவர் தனக்குச் சொந்தம் எனக் கூறி வருகிறார். இந்நிலையில் இந்த இடத்தை பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பார்வையிட்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜா, அறக்கட்டளைச் சொத்தைத் தனியாருக்குப் பத்திரப்பதிவு செய்யப் பதிவாளர் உள்ளிட்டோர் உடந்தையாக இருந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முஸ்லீம்கள் யாரும் தீபம் ஏற்ற எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றும், திமுக தான் இந்து விரோதச் சக்தியாகச் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
பழனியில் முருகன் மாநாடு நடத்தியது தொடர்பான வரவு செலவு கணக்கை இதுவரை காட்டவில்லை என்றால் இந்து அறநிலையத்துறை அமைச்சரை எப்படிச் சொல்லலாம்? என்று வினவினார்.




