
உசைனுக்கு எதிராகப் பிரிவு 354-ன் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி:டெல்லியில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உயரதிகாரியாக இருப்பவர் சாத் அகமது வர்ரைச். துணை தூதர் அந்தஸ்தில் உள்ள இவருடைய வீட்டில் மின்ஹாஜ் உசைன் என்பவர் சமையல்காரராகப் பணியாற்றி வந்திருக்கிறார்.
அந்த வீட்டில் பணிப்பெண்ணாக இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் வேலை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில், அந்தப் பெண்ணுக்கு, உசைன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரெனக் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
இதுபற்றி அந்தப் பெண், உயரதிகாரி சாத் அகமதுவிடம் புகாராகக் கூறியிருக்கிறார். எனினும், உசைன் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவர் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்.
இதன்பின், இதுபற்றிக் கடந்த ஜூன் 28-ந்தேதி டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து, உசைனுக்கு எதிராகப் பிரிவு 354-ன் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம்பற்றிப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


