பாகிஸ்தானில் தேசியக்கொடி விற்பனை செய்த கடைமீது கையெறி குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
லாகூர்:பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் அரசுக்கு எதிரான கிளர்ச்சிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குழுக்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே, பாகிஸ்தானின் 77வது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி பலூசிஸ்தானின் குயூடா பகுதியில் உள்ள ஒரு கடையில் பாகிஸ்தான் தேசியக்கொடி விற்கப்பட்டு வந்தது. அதேவேளை, பாகிஸ்தான் தேசியக்கொடியை விற்பனை செய்ய வேண்டாமெனப் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சிக்குழு எச்சரிக்கை விடுத்திருந்தது.
அந்த எச்சரிக்கையை மீறித் தேசியக்கொடி விற்பனை செய்த கடைமீது நேற்று கையெறி குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்குப் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.



