
சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டுவர தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என ஒன்றிய அரசு வாதிட்டது தவறானது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சட்டத்தில் கூறப்பட்டுள்ள ஒழுங்குமுறைகள் அனைத்தையும் ஒன்றிய அரசு ஏற்கனவே அறிவித்திருக்கிறது. ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு விரோதமாக தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற முடியாது.
ஏராளமான கட்டுப்பாடுகளுடன் ஆன்லைன் விளையாட்டுக்கள் விளையாட அனுமதிக்கப்படுகிறது. ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாவது தென் மாநிலங்களில் அதிகரித்துள்ளதாக கூறுவதற்கு எந்த புள்ளிவிவரங்களும் இல்லை.
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அரசுக்கு அறிக்கை அளிக்கும் முன்பு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் கருத்துக்களை கோரவில்லை. முறையான விசாரணை நடத்தாதது பாரபட்சமானது என்று என்று ஒன்றிய அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டுவர தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என ஒன்றிய அரசு வாதிட்டது தவறானது.
ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக ஒன்றிய அரசு விதிகள்தான் கொண்டு வந்ததே தவிர சட்டம் எதுவும் இயற்றவில்லை. மாநில அரசுகளின் உரிமைகளின் அடிப்படையிலேயே ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் உருவாக்கம். நேரடியாக விளையாடுவதற்கு ஆன்லைனில் விளையாடுவதற்கு நிறைய வேறுபாடுகள் இருக்கிறது என்று தெரிவித்தார்.


