
ஆன்லைனில் ஆர்டர் செய்பவரா நீங்கள், ஒரு நிமிடம்!… ஆர்டர் செய்ததோ மில்க் ஷேக்… கொண்டு வந்ததோ சிறுநீர்!
அமெரிக்காவில் மில்க் ஷேக்கை ஆர்டர் செய்த ஒருவருக்கு, சிறுநீர் டெலிவரி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று, வீட்டில் சமைக்கும் பழக்கம் மிகவும் குறைந்து விட்டது. இன்னும் சிறிது நாளில் வீடுகளில் சமையலறையே இருக்காது போல. வீட்டில் இருந்தபடியே பொருட்களை வாங்கும் வசதி பெருகிவிட்டது. சாப்பாடு செய்யாமல் ஆர்டர் செய்தால் போதும். வீடு தேடி தட்டில் சாப்பாடு வந்துவிடும். ஆன்லைன் முறையில் நிறைய குளறுபடிகளும், ஏமாற்று வேலைகளும் நடைபெறுகின்றன. அப்படியான ஒரு சம்பவம்தான் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தைச் சேர்ந்தவர் வூட்ஸ். இவர், அங்குள்ள பிரபலமான ஓர் உணவு டெலிவரி செயலி மூலம் மில்க் ஷேக் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த சிறிது நேரத்தில் வீட்டுக் கதவை தட்டிய டெலிவரி மேனும் மில்க் ஷேக்ஐ கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். டெலிவரி செய்யப்பட்ட மில்க் ஷேக்கினை ஸ்ட்ரா பயன்படுத்தி, வூட்ஸ் சிறிதளவு பருகியபோது, அதன் சுவை வித்தியாசமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியுற்றிருக்கிறார். வாசமும் வித்தியாசமாக இருந்துள்ளது. தான் குடித்தது மில்க் ஷேக் அல்ல, சிறுநீர் என்பதைப் புரிந்து கொண்டார்.
டெலிவரி செய்த நபரை வீட்டுக்கு அழைத்த வூட்ஸ், நடந்தது குறித்து சற்று கோபமாகவே விவரித்துள்ளார். தனது தவறை ஒப்புக்கொண்ட டெலிவரி மேன், ’தாம் நீண்டநேரமாக டெலிவரி வேலையைச் செய்து வந்ததால், ரெஸ்ட்-ரூம் செல்ல இயலவில்லை. ஆகவே, ஒரு காலியான கப்பில் சிறுநீர் கழித்திருந்தேன். தவறுதலாக, கோப்பையை மாற்றி டெலிவரி செய்துவிட்டேன்’ எனச் சொல்லி மன்னிப்பு கோரியுள்ளார்.
மேலும் வூட்ஸ், உணவு டெலிவரி நிறுவனத்துக்கு போன் செய்து நடந்ததை கூறியுள்ளார். உணவு டெலிவரி நிறுவனம், தவறை ஏற்று உணவுக்கான பணத்தில் $18ஐ கொடுத்துள்ளது. மேலும், தவறு செய்த டெலிவரி மேனையும் பணியில் இருந்து நீக்கிவிட்டனர்.
சமீபத்தில் நம்ம ஊரிலும் ஒருத்தர் பிரியாணியில் இருந்த பீஸ் எல்லாம் சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் சாதம் மட்டும் டெலிவரி செய்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவில் உள்ளதா? ஆர்டர் செய்பவர்களே உஷார் அய்யா உஷார்…


