
ஒரே நாடு ஒரே தேர்தல்! ஆட்சிக் கலைப்பா ? பரபரக்குது அதிமுக – டல் அடிக்குது திமுக உளவுத்துறை தேர்தல் ரிப்போர்ட்…
வருகிற 2024 ஆம் ஆண்டு மே மாதத்துடன் தற்போதைய பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது.இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தைச் செயல்படுத்துவதில் பிரதமர் மோடி மிகத் தீவிரமாக இருக்கிறார்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமானால் தமிழகத்தில் திமுக உட்பட பல மாநிலங்களில் ஆட்சி கலைக்கப்பட வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் சட்டசபைகளை கலைத்து விட்டு ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்துவதில் பாஜக மும்முரம் காட்டி வருகிறது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் இந்திய அரசியலின் மிகப்பெரிய மாற்றத்தை நிகழ்த்திய பெருமை பிரதமர் மோடிக்கு கிடைக்கும் எனக் கட்சி மேலிடம் கருதுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தை பொறுத்தவரையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக இப்பொழுதே தயாராகிவிட்டது. ஒருவேளை சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரலாம் என்ற நிலையில் அதிமுக அதற்கும் தயாராக இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் தயாராகிவிட்டது.
ஒவ்வொரு தொகுதிக்கும் தலா மூன்று வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார்கள்.அவர்கள்பற்றிய விவரங்களை உளவு செய்து தருமாறு மாவட்ட செயலாளர்களுக்குத் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
சட்டமன்றத் தேர்தல் வருமானால் அதனையும் எதிர்கொள்ளும் வகையில் அதிமுக தரப்பில் புதிய திட்டம் ஒன்று தயாராகி இருக்கிறது.
இதன் படி இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் எனத் தமிழ்நாடு முழுவதும் 127 மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.
இதன் மூலம் நிறைய புது முகங்களுக்கு மாவட்ட செயலாளர் பதவிகள் வரக் காத்திருக்கின்றன.இந்தத் தேர்தலில் அதிகப்படியான பணம் செலவு செய்வதற்கும் அதிமுக தயாரான நிலையில் இருக்கிறது.
வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் நிச்சயம் தமிழக சட்டமன்றத் தேர்தலும் நடைபெறும் என்பது அதிமுகவின் நம்பிக்கையாக இருக்கிறது.
இதனால் எடப்பாடி பழனிச்சாமி மிக உற்சாகமாக இருக்கிறார் ஏற்கனவே நடைபெற்ற மதுரை மாநாடு அவருக்கு மிகப்பெரிய புத்துணர்ச்சியை தந்துள்ளது.கட்சி தொண்டர்களும் புத்துணர்வு பெற்று இருக்கிறார்கள்.
இதற்கிடையே திமுகவை பொருத்த வரையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அகில இந்திய அளவிலான இந்தியா கூட்டணிமீது கவனம் செலுத்தி வருகிறார்.
ஒரு வேளை தமிழ்நாட்டிலும் ஆட்சி கலைக்கப்படலாம் என்பதை அறிந்து திமுகவும் தேர்தலுகாணவியூகத்தை வகுக்கத் தொடங்கி இருக்கிறது.இருந்த போதிலும் கட்சி தலைமையில் தேர்தலை எதிர்கொள்வதற்கான எந்தத் திட்டமும் வகுக்கப்படவில்லை.
இந்த நிலையில் மாவட்ட ரீதியாகத் திமுகவில் மிக அதிகப்படியான உள்குத்து அரசியல் இருக்கிறது. யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் கட்சிக்குள்ளேயே எதிராக வேலை செய்வதற்கு பலர் மறைமுகத் திட்டம் திட்டி இருக்கிறார்கள் இத்தகைய தகவல்கள் உளவுத்துறை மூலம் இரு கட்சி தலைமைகளுக்கும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறதுதற்போதைக்கு திமுக இளைஞரணி பலப்படுத்த வேண்டும் என்பது கட்சி மேலிடத்தின் முடிவாக இருக்கிறது.
எனவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூலம் இளைஞர் அணியைப் பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதற்கெல்லாம் உச்சகட்டமாக முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என்ற தகவலும் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வகையில் வருகிற டிசம்பர் மாதம் கூட நாடாளுமன்றத்திற்கும் இந்தியா முழுவதிலும் உள்ள சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடந்தாலும் நடக்கலாம் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது இதன் மூலம் அகில இந்திய அளவில் அரசியல் கட்சிகள் மிகப் பரபரப்பாக இயங்கத் தொடங்கி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது


