
மனைவிக்கு நிலவில் ஒரு ஏக்கர் நிலம் பரிசு! “கலக்குது “சந்திராயன்…
காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவிக்கு அவரது பிறந்த நாளில் நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி பரிசளித்திருக்கிறார் பாசக்கார கணவர் ஒருவர்…
மேற்கு வங்காள மாநிலம் ஜார்கிராம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் மசாட்டோ. இவருக்குத் திருமணம் ஆகி ஓராண்டு ஆகிறது.. இது காதல் திருமணம் ஆகும்.
தனது மனைவியைக் காதலிக்கும்பொழுது அவர் உனக்கு நிலவைப் பரிசாக வாங்கி தருகிறேன் என்று கூறியிருக்கிறார். சொன்ன வாக்கு தவறாமல் தற்போது அவர் மனைவிக்கு நிலவில் இடம் வாங்கி தந்து இருக்கிறார்.
பொதுவாகக் காதலிக்கும்போது காதலியிடம் நிலவு வேண்டுமா ? மலை வேண்டுமா? என் உயிர் வேண்டுமா? என்றெல்லாம் காதலர்கள் கேட்பார்கள். இதெல்லாம் அண்டப்புழுகு சமாச்சாரம் என்பது காதலிகளுக்குத் தெரியும் இருந்தாலும் அதில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி இருக்கும்.
ஆனால் உண்மையிலேயே காதலிக்கும்போது நிலாவை வாங்கி தருகிறேன் என்று சொன்ன சஞ்சய் மசாட்டோ இப்போது நிலவில் ஒரு ஏக்கர் இடத்தைத் தனது காதலிக்கு வாங்கி கொடுத்து அசத்தியிருக்கிறார்.

தன்னை திருமணம் செய்த மனைவியின் முதலாம் ஆண்டு பிறந்த நாளைச் சமீபத்தில் அவர் வித்தியாசமாகக் கொண்டாடினார்.
அப்பொழுதுதான் நிலவில் தான் வாங்கிய ஒரு ஏக்கர் நிலத்திற்கான இடத்திற்குறிய பத்திரத்தை மனைவியிடம் கொடுத்து அதை மனைவி பெயரிலேயே பதிவு செய்ததையும் காண்பித்தார். இதில் சஞ்சய் மசாட்டோவின் மனைவி எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார்
லூனா சொசைட்டி இன்டர்நேஷனல் என்ற நிறுவனம்மூலம் சஞ்சய் மசாட்டோ நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி இருக்கிறார். இதன் விலை பத்தாயிரம் ரூபாய் ஆகும்.
கடந்த ஓராண்டாக ஓராண்டு காலமாக இதற்கு முயற்சிகள் செய்து தற்போது நிலவில் தனக்குரிய இடத்திற்கான பத்திரத்தை வாங்கி இருக்கிறார்
அவர் பேசும்போது நிலவின் தென் துருவத்தைச் சந்திராயன் மூன்று ஆராயத் தொடங்கியதும்தான் எனக்கு நிலவில் இடம் வாங்கலாம் என்ற முழுமையான நம்பிக்கை ஏற்பட்டது. சந்திராயனுக்கு எனது நன்றி என்று கூறி இருக்கிறார்.
இதே போல் கடந்த 2020 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் என்ற இடத்தைச் சேர்ந்த தர்மேந்திரா அனிஜா என்பவர் நிலவில் மூன்று ஏக்கர் நிலத்தை வாங்கி தனது மனைவிக்குப் பரிசாக அளித்துள்ளார் அவர் தனது மனைவியின் எட்டாவது திருமண நாளை ஒட்டி இந்தப் பரிசை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்ட சந்திராயன் மூன்று நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறது. அங்கு மனிதர்கள் வாழத் தேவையான அனைத்து ஆதாரங்களும் இருப்பதாகச் சந்திராயன் மூன்று தெரிவித்துள்ளது இதனையடுத்து உலகின் பல பகுதிகளில் நிலவில் இடம் வாங்க போட்டா போட்டி போடுகின்றனர் ஆரம்பகட்டத்தில் ஒரு ஏக்கர் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்ற நிலம் இப்பொழுது ஒரு லட்சத்தைத் தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


