
திம்பு: பிரதமர் மோடிக்கு பூடானின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ’ விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.
பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாகப் பூடான் சென்றுள்ளார். பாரோ சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் மோடி தரையிறங்கியதும் அந்நாட்டு பிரதமர் ஷெரிங் டோப்காய், இந்திய பிரதமர் மோடியை ஆரத் தழுவி வரவேற்றார். பின்னர் அந்நாட்டு ராணுவ மரியாதையை மோடி ஏற்றுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் மோடிக்கு பூடானின் மிக உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ’ விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. இதனைப் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக், வழங்கினார். இந்த விருதைப் பெறும் அயல்நாட்டை சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையைப் பிரதமர் மோடி பெற்றார்.Image 1248012விருது பெற்ற பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று என் வாழ்வில் முக்கியமான நாள், பூடானின் உயரிய விருது எனக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொரு விருதும் சிறப்பானது, ஆனால் நீங்கள் வேறு நாட்டிலிருந்து ஒரு விருதைப் பெறும்போது, இரு நாடுகளும் சரியான பாதையில் செல்கின்றன என்பதை காட்டுகிறது.
இது என்னுடைய தனிப்பட்ட சாதனை அல்ல; இந்தியா மற்றும் 140 கோடி இந்தியர்களுக்கான கவுரவம். இந்தப் பெருமையைப் பூடானில் உள்ள இந்தியர்களின் சார்பாகப் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். இந்த விருதுக்காக அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.

