Electoral roll: இன்று முதல் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் செய்யலாம்!

இன்று முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடைபெறும். இதைத் தொடர்ந்து, ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த பணி இன்று தொடங்குகிறது.

இதையடுத்து தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி உள்ள வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வெளியிட்டார். அதைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாகு கூறியதாவது,

தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளோம். மாவட்ட அளவிலான பட்டியலை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிடுவர். தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இன்று முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் செய்யலாம்.

பெயர் சேர்த்தல் தொடர்பாக வாக்குசாவடி நிலை அதிகாரிகள் மூலம் நேரடியாகவும், என்விஎஸ்பி (NVSP) இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். நவம்பர் 4, 5, 18, 19-ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். டிசம்பர் 19 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *