
நா.மகாலிங்கம் நினைவுத் தினம்!.
ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியதோடு, தொழில் முனைவோருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த பொள்ளாச்சி நா.மகாலிங்கம் 1923ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிறந்தார். இவர் தந்தை வழியில் தொழிலில் ஈடுபட்டவர். இவர் பல்வேறு தொழில், வணிக திட்டங்களைத் தொடங்கினார். சக்தி குழும நிறுவனங்களின் தலைவராக உயர்ந்தார்.
சர்க்கரை ஆலை, மென்பானங்கள், சோயா ஆலை, ஆட்டோமொபைல்ஸ், நிதி, ஏபிடி டிரான்ஸ்போர்ட், பார்சல் சர்வீஸ் எனத் தொழில் சாம்ராஜ்ஜியத்தை தனது உழைப்பால் விரிவுபடுத்தினார். காங்கிரஸ் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றி 1952, 1957, 1962ஆம் ஆண்டுகளில் பொள்ளாச்சி தொகுதி எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969ஆம் ஆண்டு முதல் அரசியலிலிருந்து விலகி, சமூகப் பணிகளில் கவனம் செலுத்தினார்.
இவரது சமூக சேவையைப் பாராட்டிப் பத்ம பூஷண், இந்திரா காந்தி ஒருமைப்பாட்டு விருது, மொரீஷியஸ் அரசு விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.பல்வேறு துறைகளில் ஏராளமான சாதனைகளைச் செய்த ‘அருட்செல்வர்’ என அழைக்கப்பட்ட பொள்ளாச்சி நா.மகாலிங்கம் தனது 91வது வயதில் 2014 அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று மறைந்தார்.



