
பாவூர்சத்திரம் அருகே பணத்திற்காக மதுபோதையில் தாயின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் சுப்பையா என்பவரது மனைவி சிவந்திப் பூ.இவரது வயது 80, கணவர் இறந்ததால் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு நான்கு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிய நிலையில் உள்ளூரில் வசித்து வந்த மகன்களில் ஒருவரான முருகன் வயது 50 அடிக்கடி தனது தாயிடம் பணம் கேட்டுத் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார். மூதாட்டி சிவந்திப்பூ புளி குத்தும் வேலைக்குச் சென்றதாகவும், அதன் மூலம் வரும் வருமானத்தையும் முதியோர் பென்ஷன் மூலம் வரும் வருமானத்தையும் கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவில் மது போதையில் வந்த முருகன் சிவந்திப்பூவிடம் அவர் இருக்கும் ஓட்டு வீட்டை எழுதித் தருமாறும் பணம் கேட்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு மூதாட்டி சிவந்திப் பூ மறுத்துள்ளார். மேலும் மகன் முருகனிடம் தனக்கு நோய்வாய்ப்பட்டு இருப்பதால் மாத்திரை வாங்கி தருமாறும் கூறியுள்ளார். முருகனுக்கு திருமணமாகி இரண்டு மகன்களுள்ள நிலையில் ஒரு மகனை மெடிக்கலுக்கு சென்று மருந்து வாங்க அனுப்பியபொழுது அங்குச் சிறுவன் மருந்து கேட்டதால் மருந்து கொடுக்கவில்லையெனக் கூறப்படுகிறது.
அதனை முருகனிடம் சிறுவன் தெரிவித்த நிலையில் நீ உயிரோடு இருப்பதே தேவையில்லாதது எனக் கூறி ஆத்திரமடைந்து சிவந்தி பூவின் கழுத்தை துணியால் இருக்கியும் வீட்டினுள் கிடந்த அம்மிக்கல் மற்றும் மற்றொரு கல்லைக் கொண்டு தலையில் போட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த சிவந்தி பூச்சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த இன்ஸ்பெக்டர் சுரேஷ் எஸ் ஐ கோவிந்தராஜ், தனிப்பிரிவு ஏட்டு பாலமுருகன், நம்பி உள்ளிட்ட போலீசார் உயிரிழந்த சிவந்தி பூவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தனது தாயின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த முருகனையும் உடனடியாகப் போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் முருகன் மது அருந்தும் பழக்கம் கொண்டவராகவும் மூதாட்டிக்கு வரும் பென்ஷன் ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்புடன் கொடுக்கப்பட்ட ஆயிரம் ரூபாயையும் சேர்த்து கேட்டதாகவும், ஓட்டு வீட்டைத் தனக்கு எழுதித் தருமாறும் கேட்டதில் தாய்க்கும் மகனுக்கும் சண்டை ஏற்பட்டதில் மது போதையில் இருந்த முருகன் ஆத்திரத்தில் கல்லைத் தூக்கி தலையில் போட்டுக் கொலை செய்தது தெரிய வந்தது.

