
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். MRB Covid nurses
சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.ஆர்.பி செவிலியர் அமைப்பினர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ். வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள அனைத்து வளாகங்களும் மூடப்பட்டு உள்ளது.
இதனைத் தொடர்ந்து, அங்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டம் நடத்திவரும் செவிலியர்களை காவல் துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச்சென்று அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள எம்.ஆர்.பி செவிலியர் அமைப்பினர் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்னைக்கு வந்தவண்ணம் உள்ளனர். இதனால், மருத்துவமனைகளில் செவிலியர்கள் பணி பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் செவிலியர்களை காவல்துறையினர் கைதுசெய்து வருகின்றனர்.
தங்களை போராட்டம் நடத்தவிடாமல் கைதுசெய்யும் காவல்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து செவிலியர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்படுகிறது.


