
சென்னை:சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில், திமுக எம்.பி ஆ.ராசா, இன்று சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
வருமானத்திற்கு அதிகமாக 5 கோடியே 53 லட்சம் சொத்து சேர்த்ததாக 2015ல் திமுக எம்.பி ஆ.ராசா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.எழில்வேலன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ராசா உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி இருந்தனர். அவர்களுக்கு வழக்கு ஆவணங்களை வழங்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையைச் செப்டம்பர் 18ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
இதனிடையே, அடுத்த விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு ஆ.ராசா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுகுறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.



