
தூத்துக்குடி மாவட்டத்தில் பகுதி நேர வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட நபரைச் சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் வாவு யூவியாஸ் பாக்மீ இவரது மருமகன் ஜின்னா என்பவரது செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் அப்மூலம் பார்ட் டைம் ஜாப் குறித்து குறுஞ்செய்தி வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்தக் குறுஞ்செய்தி அனுப்பிய நபரை வாவு யூவியாஸ் பாக்மி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அந்த நபர் வாவு யூவியாஸ் பாக்மியிடம் ஆசை வார்த்தைகள் கூறி மோசடியாகப் பேசித் தனது பல்வேறு வங்கி கணக்குகளுக்குப் பணம் அனுப்பினால் லாபம் பார்க்கலாமெனக் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து வாவுயூவியாஸ் பாக்மீ தனது மருமகன் ஜின்னாவின் வங்கி கணக்கிலிருந்து சுமார் 11 லட்சத்து 70 ஆயிரம் ரொக்க பணத்தை அனுப்பி உள்ளார். இதன் பின்பு தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்து மோசடி நபரிடம் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கு மோசடி நபர் பணத்தை திருப்பித் தராமல் வாவு யூவியாஸ் பாக்மீ மற்றும் ஜின்னா ஆகியோரின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு மிரட்டி உள்ளார்.
இதைத்தொடர்ந்து வாவு யூவியாஸ் பாக்மீ தேசிய சைபர் கிரைம் குற்ற தடுப்பு போர்ட்டலில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில் இந்த மோசடியில் ஈடுபட்டது மதுரை தத்தனேரி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்ற வாலிபர் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மதுரையில் இருந்த ஸ்ரீதரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து மோசடிக்குப் பயன்படுத்திய மூன்று செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து ஸ்ரீதரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

