
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று மாநில சுயாட்சி பற்றி தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிப்பதால் முதல்வர் இந்த முடிவை எடுத்திருப்பாரோ என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது .இது பற்றிய நமது ஜெம் தொலைகாட்சி வழங்கும் ஒரு சிறிய செய்தி தொகுப்பினை இப்போது நாம் பார்க்கலாம் .
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது . இந்நிலையில் இன்று முதலவர் தனது சமூக வலைதளபக்கமான எக்ஸ் தளத்தில் , தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டி வருவதாகவும் இதனால் மாநிலத்தேவைகளை பூர்த்தி செய்ய இயலவில்லை எனவும் , மாநில சுயாட்சியே அந்தந்த மாநிலங்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்கான சிறப்பான ஆட்சி முறையாக இருக்கும் எனவும் பதிவிட்டுள்ளார்.
மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களையும் உரிமைகளையும் பெற்றுத்தந்து, வலிமையான – உண்மையான கூட்டாட்சி இந்தியாவைக் கட்டமைப்போம் எனவும் , மாநில சுயாட்சிக் கருத்தியலின் தேவையை இந்தியா முழுக்கக் கொண்டு சேர்த்து, எண்ணங்களால் ஒன்றிணைத்து, அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள முயற்சிப்போம் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
முதல்வர் குறிப்பிட்டுள்ள இந்த மாநில சுயாட்சி என்பது, நாம் எல்லோரும் குழப்பமோ , கலக்கமோ அடையக்கூடிய வார்த்தை ஒன்றும் அல்ல, மொழிவாரியாக பிரிக்கப்பட்ட இந்திய ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு மாநில மக்களுக்கும் மிக மிக முக்கியத் தேவையாக இன்றைய அரசியல் சூழ்நிலையில் பெரும்பாலோனாரால் வரவேற்கப்படக்கூடிய விஷயமாகும்.
இதை படிக்கும் போது நமக்குள்ளும் கேள்வி எழலாம். எதற்காக மாநில அரசு அதிக அதிகாரம் பெற வேண்டும் என்பதே அந்த கேள்வி.உண்மையை சொல்லவேண்டுமானால் கூட்டாட்சி தத்துவத்தை ஏற்று அரசு நடக்கக்கூடிய எந்த ஒரு ஒன்றியம் அல்லது நாட்டில் மாநில அரசிடமே அதிக அதிகாரம் இருக்க வேண்டும்.
அவ்வாறு மாநில சுயாட்சி முறை இருந்தால் தான் ஒவ்வொரு மாநிலங்களும் அதனதன் வருவாய் அடிப்படையில் அந்தந்த மாநிலங்களை முன்னேற்றிக் கொள்ள முடியும் . அதிலும் குறிப்பாக இந்தியா போன்ற துணை கண்டத்தில், ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தனி மொழி, தனி கலாச்சாரம், தனி பண்பாடு, தனி உடை மற்றும் உணவு பழக்கவழக்கம் என்று எல்லாம் மாறுபடுகிறது.
எனவே இங்கு மாநில சுயாட்சி என்பது அந்தந்த மாநில உரிமைகளை காப்பாற்றக்கூடியதாகவே பார்க்கப்படுகிறது.எனவே, தமிழக முதல்வர் கூற்றின்படி இந்த மாநில சுயாட்சி கோரிக்கை இந்தியாவில் அடுத்தடுத்து வரும் நாட்களில் வலுப்பெறுமா , அல்லது நடைமுறையில் உள்ளபடியே தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



