
எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் எம்ஜிஆரின் படத்தின் முன்பு கன்னத்தில் தப்பு போட்டு, வாயில் அடித்து ஏதேனும் தவறு செய்தால் மன்னியுங்கள் எம்ஜிஆரே…! என எம்ஜிஆர் திரு உருவ படத்தை மனமுருகி வணங்கிய தீவிர ரசிகரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா விமர்சையாகக் கொண்டாடும் நிகழ்ச்சி ஒன்றிய அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அச்சம்பாடு சவுந்தரபாண்டி தலைமை வகித்தார். இந்த நிகழ்வின்போது எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்ஜிஆரின் ரசிகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்த அவரின் தீவிர ரசிகர் ஒருவர் அவரின் படத்தின் முன்பு நின்று ஆலயத்தில் தெய்வங்களை வழிபடுவது போல “கன்னத்தில் தப்பு போட்டு” நாங்கள் ஏதேனும் தெரியாமல் பேசி இருந்தால் மன்னியுங்கள் கடவுளே…! என வாயில் அடித்து எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு முன் நின்று அந்தத் தீவிர ரசிகர் வணங்கிக் கொண்டார்.
அதன் பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டபோது அவருக்குக் கொடுத்த அந்த இனிப்பை எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு முன்பு நின்று மீண்டும் எம்ஜிஆரை வணங்கிவிட்டு அதனைச் சாப்பிட்டார்.இந்தச் செயலைக் கண்ட அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் எம்ஜிஆரின் தீவிர பக்தரின் செயலைக் கண்டு வியந்தனர்.

