
மெட்டா நிறுவனம் கிட்டத்தட்ட 3 ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இது அந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 5 சதவீதம் ஆகும்.
இது தொடர்பான ஆவணங்கள் வெளியாகி இருப்பதாகவும், இன்று (பிப்ரவரி 10) பணிநீக்கம் தொடர்பான நோட்டீஸ் ஊழியர்களுக்கு வழங்கப்பட இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு சார்ந்த முதலீடுகளைச் சீர்படுத்தவும், எதிர்பார்த்த அளவுக்குப் பணியாற்றாத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதென மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கைமூலம் இந்த ஆண்டுக்கான நிதிநிலையை திட்டமிடவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் கடந்த ஜனவரி மாதத்தில் ஊழியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் சரியாகப் பணியாற்றாதவர்களை உடனடி பணிநீக்கம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாப்ட், அமேசான், சேல்ஸ்ஃபோர்ஸ் உள்ளிட்டவை ஆயிரக்கணக்கான ஊழியர்களைத் தொடர்ச்சியாகப் பணிநீக்கம் செய்து வருகின்றன.
அந்த வரிசையில் மெட்டா நிறுவனத்தின் முடிவால் ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
