Megamalai: பட்ஜெட் ட்ரிப்!

Advertisements

மேகங்கள் தவழும் மேகமலை ஒரு கடவுளின் தேசம்!

மலைகளின் ராணி’ என்று ஊட்டியையும் ‘இளவரசி’ என்று கொடைக்கானலையும் சொல்பவர்கள் மேகமலையைப் பார்த்தால் தங்களது பயணத்தை நிச்சயம் மறு பரிசீலனை செய்து விட்டுத் தான் மலையை விட்டுக் கீழே இறங்கிவருவார்கள்…

அமைதியான ஏரி, அடுக்கடுக்கான பசுந்தேயிலைத் தோட்டங்கள், அதற்கு வேலிபோல் அமைந்த நீண்ட மரங்களை உடைய காடுகள், முடிவில் பசுமையான பள்ளத்தாக்குகள் இது தான் மேகமலையின் அடையாளம்! உலகத்து அழகை தன்னகத்தே கொண்டுள்ள மேகமலை ஒரு கடவுளின் தேசம்!

மேகங்கள் தவழும் மலை என்பதால், ‘மேகமலை’ என்று பெயர் வந்திருக்கலாம். திடீர் மழை, தரையில் தவழும் மேகங்கள், அவ்வப்போது எட்டிப் பார்க்கும் சூரியன், எப்போவாவது கேட்கும் இன்ஜின் உறுமல் சத்தம் என்று ஏகாந்தமான சூழலுள்ள இடம் மேகமலை.தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதியில் உயர்ந்து நிற்கும் இந்த மலைத் தொடர், ஒரு பக்கம் மேற்குத் தொடர்ச்சி மலைகளாலும், இன்னொரு பக்கம் வருஷநாடு மலைத் தொடராலும் இணைந்துள்ளது.

பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் இரு பக்கமும் கரை கொண்ட வாய்க்கால் போல மலைகள் உயர்ந்து நிற்க… இரு மலையின் முகடுகள்வரை மேவி நிற்கின்றன தேயிலைச் செடிகள்.இந்த மலைச் சாலையில் மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகள் இருக்கின்றன. சிங்கிள் ரோடு என்பதுடன் பக்கவாட்டுத் தடுப்புச் சுவர், பாதுகாப்பு ஏற்பாடுகள் என எதுவும் சாலையில் இல்லை.எனவே, கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைந்த காரை எடுத்துக்கொண்டு செல்வதைத் தவிர்க்கலாம்.

இரு மலைத் தொடர்களுக்கு நடுவே, ஆங்காங்கே பசுமையான தேயிலைச் செடிகள் சூழ அழகான நீர்த் தேக்கங்கள் இருக்கின்றன. இந்த நீரை ஒருங்கிணைத்துச் சிறிய அளவில் சுருளியாறு மின்சாரத் திட்டம் செயல்படுகிறது. மஹாராஜா மெட்டு என்ற இடத்திலிருந்து கம்பம் பள்ளத்தாக்கின் முழு அழகையும் ரசிக்கலாம். இங்கிருந்து முல்லைப் பெரியார் நீர் தேக்கத்தையும், கண்ணகி கோவிலையும் பார்க்க முடியும்.மஹாராஜா மெட்டின் மேற்குப் பகுதியில்தான் ‘மூல வைகை ஆறு’ உருவாவதாகக் கூறப்படுகிறது.

ஹைவேவிஸ் குடியிருப்புப் பகுதியிலிருந்து ‘தூவானம்’ என்று கூறப்படும் இடத்துக்கு இரண்டு கிலோ மீட்டர் தூரம்தான் இருக்கும்.மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்த் தேக்கம் மலையின் முகட்டில் இருக்கிறது. இங்கிருந்து வெளியேறும் நீர்தான் கீழே உள்ள சுருளி அருவிக்குச் செல்கிறது.

மலை முகட்டிலிருந்து வெளியேறும் நீர், பள்ளத்தாக்கிலிருந்து மேல்நோக்கி வரும் காற்றில் சிதறடிக்கப்பட்டு மேகப் பொதியாக மாறி நீர்த் துளிகள் காற்றில் மிதக்கின்றன.அதனால் இந்த இடத்துக்கு ‘தூவானம்’ என்று பெயர். மேகமலையில் யானைகள் நடமாட்டமும் உண்டு.

மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, அப்பர் மணலாறு, வெண்ணியாறு, மஹாராஜா மெட்டு, இரவங்கலாறு எனத் தொழிலாளர் குடியிருப்புப் பகுதிகளுக்கும், எஸ்டேட் டிவிஷன்களுக்குமான பெயர்களைத் தாங்கி இருக்கிறது இந்த மலைப் பகுதி.அமைதியான சூழலில் அதிகம் செலவு இல்லாமல் குடும்பத்தோடு கோடை விடுமுறையை கொண்டாட நினைப்பவர்களுக்கு மேகமலை சரியான சாய்ஸ்.

இரவு அங்கேயே தங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஹைவேவிஸ் (பச்சைகூமாட்சி) என்ற இடத்தில் டவுன் பஞ்சாயத்து அலுவலகமும், அத்துடன் 13 தங்கும் அறைகளும் உள்ளன. மூவர் தங்கும் அறை 750 ரூபாய். நால்வர் தங்கும் அறை 1000 ரூபாய். இங்கு முன்பதிவு செய்துவிட்டுச் செல்வது நல்லது (04554 232225). இது தவிர வேறுசில உயர்தர ரெசார்ட்டுகளும் உண்டு.அது கொஞ்சம் எக்ஸ்பென்ஸிவா இருக்கும் அதுக்கு ஓக்கேன்னா அது செம லொகேஷன்.

காலையில் போய்விட்டு மாலையில் திரும்பி விடலாம் என்று விரும்புகிறவர்கள் தேனியில் அல்லது சின்னமனூரில் தங்கலாம். தேனியிலும், சின்னமனூரிலும் அனைத்துவிதமான விடுதிகளும் இருக்கின்றன. என்ன ஒரு நாள் ட்ரிப் என்றால் பல சுவாரஸ்யமான இடங்களைப் பார்க்க முடியாமல் போகலாம். அது பர்ஸைப் பொறுத்து நீங்கள் முடிவு செய்துக்கலாம்.

உத்தமபாளையம்

மேகமலை ட்ரிப் போக நினைப்பவர்களுக்கு இன்னொரு தகவல் -அங்கு போன கையோடு கூப்பிடும் தூரத்தில் இருக்கும் சுருளி ஃ பால்ஸ், தேக்கடி, வைகை டேம் மூன்றுக்கும் சேர்த்து ஒரு விசிட் அடித்துவிட்டு வர முடியும். இந்த மூன்று இடங்களுக்கும் சின்னமனூர்தான் சென்டர் பாயிண்ட்.

சுருளி அருவி

திண்டுக்கல் – சின்னமனூர் 107 கி.மீ. மதுரை – சின்னமனூர் 98 கி.மீ.சின்னமனூர் – மேகமலை 36 கி.மீ. சின்னமனூரிலிருந்து, சுருளி ஃ பால்ஸ் 27 கி.மீ.தேக்கடி 44 கி.மீ. தேனி – வைகை அணை 15 கி.மீ.தூரமும் உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *