
உழைக்கும் தோழர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவோம் என்று, ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மேதின வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், முதலாளித்துவ நுகத்தடியில், அடிமைகளாகப் பூட்டப்பட்டிருந்த உலகத் தொழிலாளர்கள் விடுதலை பெற்ற வீர வரலாறு பிரகடனம் செய்யப்பட்ட நாள்தான், மே நாள் என்றும், உதயசூரியன் உதிக்கும் அதிகாலை முதல், அந்தி சாயும் வேளை வரை, தொழிலாளர் வர்க்கம் வேலை செய்வதற்கு விதிக்கப்பட்ட கொடுமைக்கு, முடிவுகட்ட 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, உரிமைக்குரல் எழுப்பப்பட்டது என்றும், 16 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை உழைப்புச் சுரண்டலுக்கு ஆளான தொழிலாளர்கள், முதன் முதலில், 1806-ஆம் ஆண்டில், அமெரிக்க பிலடெல்பியா நகரில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர் என்றும், அமெரிக்காவில் 1866-ல் உருவான தேசிய தொழிற்சங்கம், எட்டு மணி நேரம் வேலை நாள் என்பதை சட்டமாக்க வேண்டும் என்று போராடியது என்றும் வைகோ தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில் நாடு விடுதலை பெற்ற பின்னர், இல்லாத அளவிற்கு நரேந்திர மோடி அரசு, தொழிலாளர் வர்க்கத்தின் மீது மோசமான தாக்குதலைத் தொடுத்து வருகிறது என்றும் தெரிவித்த அவர், உழைக்கும் தோழர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவோம் என்பதோடு, மே முதல் நாள் வாழ்த்துகளை தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன் என ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.


