
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி வனப்பகுதியில் அவுட்டுக்காய் நாட்டு வெடிகுண்டு வைத்துக் காட்டுப் பன்றிகளை வேட்டையாட முயன்ற ஆறு பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். ஆத்தூர் அருகே தம்மம்பட்டி வனச்சரகப் பகுதியில் வனத்துறையினர் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கீரிப்பட்டி கீழ்க்கணவாயில் அவுட்டுக்காய் நாட்டு வெடிகுண்டு வைத்து வனவிலங்குகளை வேட்டையாடுவதாகத் தகவல் கிடைத்தது. அங்குக் காட்டுப் பன்றிகளை வேட்டையாட முயன்ற மல்லூர் பாறைப்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ், குமார், மணிகண்டன் சீனிவாசன் ஆகிய நால்வரைக் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த அவுட்டுக்காய் நாட்டு வெடிகுண்டு கத்தி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
விசாரணைக்குப் பின் கீழ்க்கணவாயைச் சேர்ந்த தோட்ட உரிமையாளர் கணபதி, நாட்டு வெடிகுண்டு வழங்கிய கோபி ஆகியோரையும் கைது செய்தனர். இந்த ஆறு பேர் மீதும் வன உயிரினக் குற்ற வழக்குப் பதிந்து ஆத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்திச் சிறையில் அடைத்தனர்.



