தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான கவுன்சலிங் தொடங்கியது!!

Advertisements

சென்னை : தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கான முதல்கட்ட கவுன்சலிங் ஆன்லைன் மூலம் தொடங்கியது. tnmedicalselection.org, http://tnhealth.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக கலந்தாய்வு தொடங்கியது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு 25 ஆயிரத்து 856 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு 13 ஆயிரத்து 179 பேரும் தகுதிபெற்று இந்த கவுன்சலிங்கில் பங்கேற்க உள்ளனர். முதல்கட்டமாக தொடங்கும் இந்த கவுன்சலிங் இன்று காலை ஆன்லைன் மூலம் நடக்கிறது. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விருப்பம் தெரிவிக்கும் மாணவர்கள் இம்மாதம் 31ம் தேதி வரை தங்களுக்கான கல்லூரிகளை தேர்வு செய்யலாம். அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் சேர தகுதியுள்ள மாணவ-மாணவியருக்கான கவுன்சலிங் 27ம் தேதி தொடங்கும்.

தேர்வுக் குழுவினர் ஆகஸ்ட் மாதம் 1 மற்றும் 2ம் தேதிகளில், மேற்கண்ட மாணவ மாணவியருக்கான இடங்களை ஒதுக்கீடு செய்வார்கள். அந்த பட்டியல் ஆகஸ்ட் 3ம் தேதி வெளியிடப்படும். இட ஒதுக்கீடு பெற்றவர்கள் ஆகஸ்ட் 4ம் தேதி தங்களுக்கான இடஒதுக்கீட்டு ஆணைகளை பதிவிறக்கம் செய்து, அவர்களுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்ட கல்லூரிகளில் ஆகஸ்ட் 8ம் தேதி சேர வேண்டும். இதையடுத்து, இட ஒதுக்கீடு பெற்றவர்கள் கல்லூரிகளில் செலுத்த வேண்டிய கட்டணம் குறித்த விவரங்கள் அனைத்தும் www.tnhealth.tn.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்படும். தவிரவும், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவ மாணவியர் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 13 லட்சத்து 50 ஆயிரம் செலுத்த வேண்டியிருக்கும். வெளிநாடு வாழ் இந்திய மாணவ-மாணவியர் ரூ.24 லட்சத்து 50 ஆயிரம் செலுத்த வேண்டி இருக்கும். இந்த கட்டணங்களை பொறுத்தவரையில் கல்லூரிகளை பொறுத்து மாறும் என்று தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தனியார் பல்கலைக் கழகங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.5 லட்சத்து 40 ஆயிரம், நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு ரூ. 16 லட்சத்து 20 ஆயிரம் கட்டணம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் ரூ.25 லட்சத்து 80 ஆயிரம் செலுத்த வேண்டியிருக்கும். பல் மருத்துவப் படிப்புகளில் தனியார் கல்லூரிகளில் சேருவோர் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.6 லட்சம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ரூ.9 லட்சம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *