Mayiladuthurai Murder Attempt Case: தேடப்பட்டு வந்த குற்றவாளி 16 ஆண்டுகளுக்கு பிறகு கைது!

Advertisements

கொள்ளிடம் அருகே கடந்த 2007 -ஆம் ஆண்டு  கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை 16 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மகேந்திரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மண்ணாங்கட்டி என்கின்ற மகேந்திரன் என்பவரின் மகன் 40 வயதான சுரேஷ் (எ) அண்டா சுரேஷ்.

இவர் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட பிரச்சனையில் அப்பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் மற்றும் பாலு ஆகிய இருவரை கத்தியால் குத்திய வழக்கில் ஆணைக்காரன் சத்திரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர்  சுரேஷை தீவிரமாக தேடி வந்தனர்.

இவர் காவல்துறையினருக்கு தண்ணீர்  காட்டும் விதமாக அவர்களின் கண்ணில் படாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இது சம்பந்தமான வழக்கு சீர்காழி நடுவர் நீதிமன்றத்தில் இருந்து வருகிறது. இவ்வழக்கில் இவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியும் இவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதனால் சுரேஷ்க்கு  நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்தும், அதனைத்தொடர்ந்து சுரேஷ் வெளியூர்களுக்கு சென்று தங்கி, இரவு நேரங்களில் மகேந்திரப்பள்ளி கிராமத்திற்கு வருவது, பின்னர் வெளியே ஊருக்கு சென்று விடுவது இப்படியே இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின் பேரில் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் பரிந்துரையின் பேரிலும் தனிப்படை காவல்துறையினர் நேற்று இவரை மயிலாடுதுறை அருகே ஆறுபாதி என்ற கிராமத்தில் இவர் இருப்பதை அறிந்து அங்கு சென்று கைது செய்தனர்.  அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து சுரேஷை சீர்காழி கிளை சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.

கடந்த 2003 -ஆம் ஆண்டு மாதானம் கிராமத்தில் இவருக்கும் அப்பகுதி சேர்ந்த மற்றொருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டு, இவர் மீது புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் பிசிஆர் வழக்கு பதிவு செய்து அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் கடந்த 2022 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 -ஆம் தேதி ஆச்சாள்புரத்தில் இருந்து மகேந்திரப்பள்ளி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பாட்டாளி மக்கள் கட்சி மயிலாடுதுறை மாவட்ட துணை செயலாளர் சிவபாலனை கார் ஏற்றி கொலை முயற்சி செய்த வழக்கும் ஆணைக்காரன் சத்திரம் இவர் மீது காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் சுரேஷை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபர் 16 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *