Mayiladuthurai Leopard Movement: சிறுத்தை நடமாட்டத்தால் அலறும் மக்கள்.. பள்ளிக்கு விடுமுறை!

மயிலாடுதுறை அருகே செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட பால சரஸ்வதி மெட்ரிக் பள்ளிக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே இரவு 11 மணிக்குச் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரிடம் சிறுத்தையின் கால் தடம் உள்ளதை  பொதுமக்கள் காண்பித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் போலீசார் மற்றும் வனத்துறை ஆய்வு செய்தபோது நாய்கள் சிறுத்தையை விரட்டிச் சென்றது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்தது. இதனால் ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் வனத்துறை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாமெனப் போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தியுள்ளனர். சிறுத்தையைக் கண்டால் 9626709017 என்ற எண்ணுக்கு மக்கள் தகவல் தெரிவிக்கலாமென வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட செம்மங்கரை அருகில் உள்ள பால சரஸ்வதி மெட்ரிக் பள்ளிக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *