
தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு வறண்ட வானிலை நீடிக்கும். அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். சென்னையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் வறண்ட வானிலை நிலவிய நிலையில், இன்றும் (பிப்.12), நாளையும் (பிப்.13) அதே நிலை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாகச் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 18ம் தேதிவரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேநேரம், நாளை மறுநாள் (பிப்.14) வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சொல்லப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
