
கைதிகளை பரிமாற்றுவது தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் நீடித்து வரும் நிலையில் தலா 1000 கைதிகளை பரிமாற கடந்த மே மாதம் ஒப்பந்தம் ஆனது. இதை தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக மிகவும் நோய் வாய்ப்பட்ட,காயமடைந்த கைதிகளை இரு நாடுகளும் பரிமாறினர்.
இதை யடுத்து,உக்ரைன் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் ருஸ்தம் உமரோவ் பேசியபோது,‘‘ ரஷ்யாவுடன் கைதிகளை பரிமாறுவது தொடர்பாக, மத்தியஸ்தம் செய்யும் துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளுடன் ஆலோசனை தொடங்கியுள்ளது’’ என்றார்.
இந்நிலையில், ரஷ்யாவில் உள்ள 1,200 உக்ரைன் கைதிகளை பரிமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரஷ்யா தரப்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை எனக் கூறப்படுகிறது.


