
ரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் மாசி மாத கிருத்திகையையொட்டி அறுகோண தெப்பக்குளத்தில் பக்தர்கள் கைகளில் அகல் விளக்குகளை ஏந்தி அரோகரா. அரோகரா.. எனப் பக்தி கோஷத்துடன் சிறப்பு வழிபாடு செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் மாசி மாத கிருத்திகை முன்னிட்டு காலையில் உச்சி கணபதி, மற்றும் ஸ்ரீ பாலமுருகன் ஸ்வாமிகளுக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திருமஞ்சள் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம்செய்து மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மாலை கோவில் அடிவாரத்தின் கீழே மிகப் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள ஆறுகோண தெப்பக்குளத்தில் ஸ்ரீ பாலமுருகன் சுவாமி உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து மலையிலிருந்து மங்கள மேளதாளம் முழங்கப் பக்தர்கள் சுவாமியை ஊர்வலமாகக் கொண்டு வந்து தெப்பக்குளத்தில் வைத்து ஸ்ரீ பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில் சிறப்பு நாதஸ்வர வாத்தியங்கள் கூடிய மங்கல தீபாரதனையை அறுகோண தெப்பக்குளத்திற்கு காட்டினார்கள். பின்னர் கூடியிருந்த அனைத்து பக்தர்களும் முருகனை மனதில் நினைத்தில் அரோகரா.. அரோகரா.. எனப் பக்தி கோஷங்களை வெளிப்படுத்தித் தங்கள் கைகளில் இருந்த அகல் விளக்குகளைத் தெப்பக்குளத்திற்கு காட்டி முருகனை வழிபட்டுச் சென்றனர்.
அதைத்தொடர்ந்து மலைமேல் உள்ள பாலமுருகன் சுவாமிக்குப் பல்வேறு வகையான சோடா உபசாரங்கள் மற்றும் சிறப்புப் பூஜைகள் செய்து தங்கத்தேரில் முருகப்பெருமான் கம்பீரமாக அமர்ந்தபடி கோவில் முழுவதும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து காட்சி அளித்தார்.

