
புதுடில்லி: “வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தால், ஏழை குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு பெண்களுக்கும் ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்” என அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வாக்குறுதி அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெண்களுக்கு 5 வாக்குறுதிகளைக் காங்கிரஸ் அளித்துள்ளது. வாக்குறுதிகள் என்னென்ன?
* காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும்.
* வறுமை கோட்டுக்குக் கீழுள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும்.
* மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களின் ஊதியம் இரண்டு மடங்கு உயர்த்தப்படும்.
* பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமைகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப் பஞ்சாயத்துக்கு ஒரு பெண் பணியாளர் நியமனம் செய்யப்படும்.
* நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான ஒரு விடுதி கட்டப்படும்.
ஏற்கெனவே, மத்திய அரசு பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் வேலை வாய்ப்புகள் நிரப்பப்படும், அரசுப் பணிக்கான வினாத்தாள் கசிவதை தடுக்க சட்டம், தொழிற்பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு ரூ. ஒரு லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் எனக் காங்கிரஸ் எம்.பி ராகுல் வாக்குறுதி அளித்துள்ளார்.


