
மராட்டிய மாநிலத்தில் அடுத்த மாதம் 20-ந்தேதி நடைபெறவுள்ள 288 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பா.ஜ.க ஆட்சியைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவரின் பதிவில், “மராட்டிய மாநில விவசாயிகளின் மிகப்பெரிய எதிரி பா.ஜனதாதான்” என்று கூறி, பா.ஜ.க ஆட்சியின்போது 20,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு, பா.ஜ.க அரசு காப்பீட்டு நிறுவனங்களுக்கு ₹8,000 கோடி வழங்கியதையும், ஆனால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மறுத்துவிட்டதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெங்காயம் மற்றும் சோயாபின் ஆகியவற்றின் ஏற்றுமதி வரியை உயர்த்தியதினால், இந்தப் பயிர்களை விளைவிக்கும் விவசாயிகள் ஏற்றுமதி வரிசுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பருத்தி மற்றும் கரும்பு உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், பால் கூட்டுறவு சங்கங்கள் சிக்கலில் உள்ளதாகவும் கார்கே கூறினார்.
அவர் தொடர்ந்து, பா.ஜ.க ஆட்சியை அகற்றினால் மட்டுமே விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும் என்றும், மாநில மக்கள் காங்கிரஸ் தலைமையிலான “மகாபரிவர்த்தன்” கூட்டணியை விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.


