
சுற்றுலா சென்ற திருமணமான புதுப்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம், ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, கடந்த அக்டோபர் 21 ஆம் தேதியன்று இவர்கள் இருவரும் பைரவ பாபா கோயிலுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர்.
அப்போது, அந்தப் பகுதியில் மதுபோதையிலிருந்த 8 பேர் அந்தத் தம்பதியினரைச் சூழ்ந்து தகராற்றில் ஈட்டுப்பட்டுள்ளனர். அப்போது மதுபோதையிலிருந்தவர்கள் சிலர் அப்பெண்ணின் கணவரைப் பிடித்துத் தாக்கி அந்தப் பெண்ணைச் சில நபர்கள் பிடித்துத் தாக்கித் தரதரவென்று சிறிது தொலைவுக்கு இழுத்துச் சென்றுள்ளனர்.
அதன்பிறகு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் பாலியல் வன்கொடுமை செய்தபோது அச்சம்பவத்தை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துள்ளனர். மேலும் இந்தச் சம்பவம்குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவித்தால் வீடியோவைச் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் எனக் கூறி மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து அவர்களிடமிருந்து தப்பித்த இளம் தம்பதிகள் பயந்து அச்சம்பவம் குறித்து முதலில் காவல்துறையிடம் புகார் தெரிவிக்காமலேயே இருந்துள்ளனர். பின்னர், அக்டோபர் 23 ஆம் தேதியன்று காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் 5 பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை காவல்துறை தேடி வருகின்றனர்.


