kaniyakumari:Instagram மூலம் ஏற்பட்ட பழக்கம் – கல்லூரி மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை!

இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் மாணவி ஒருவர் கர்ப்பம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மதிக்கத் தக்க மாணவி ஒருவர் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.இந்த நிலையில் மாணவிக்குக் கடந்த வாரம் திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாகப் பெற்றோர் அவரைச் சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு அந்த மாணவியின் வயிற்றில் பாதிப்பைக் கண்டறிய ஸ்கேன் செய்து பார்த்தபோது அவர் 2 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனைக் கண்டு மாணவியின் தாய் அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவியின் தாயார் மகளிடம் விசாரித்தபோது களியல் பகுதியைச் சேர்ந்த அஜய் (வயது 20) என்ற வாலிபருக்கும், தனக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இந்தப் பழக்கத்தைப் பயன்படுத்தி திற்பரப்பில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்று அஜய் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததையும் தெரிவித்துள்ளார்.

உடனே இதுகுறித்து மாணவியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அஜய் மீது காவல்துறையினர் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *