
எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கவர்னர் ஆர்.என். ரவி நேரில் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை,
வேளாண் துறையில் மிகப்பெரிய விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார். எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு வயது 98. அவருக்குச் சவுமியா, மதுரா, நித்யா ஆகிய 3 மகள்கள் உள்ளனர். எம்.எஸ்.சுவாமிநாதனின் இறுதி சடங்கு இன்று அரசு மரியாதையுடன் நடக்கிறது.
எம்.எஸ்.சுவாமிநாதனின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காகத் தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நேற்று எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் எம்.எஸ். சுவாமிநாதனின் மகள் சவுமியா சுவாமிநாதன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில் எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோர் இன்று நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் எம்.எஸ். சுவாமிநாதனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.


