
முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கான் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், இன்று தனது வெளிநாட்டு பயணத்தை தொடங்குகிறார்.
தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், இன்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் புறப்படுகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்படும் விமானத்தில் பயணிக்கும் ஸ்டாலின், துபாய் வழியாக சுவீடன் சென்றடைகிறார். அங்கிருந்து ஸ்பெயின் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் மட்டுமின்றி, முக்கிய அரசு அதிகாரிகளையும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் முதலமைச்சர் பயணிக்கவுள்ளார். அங்கிருந்தும் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் தொழில்நிறுவன பிரதிநிதிகளை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வெளிநாடு பயணத்தை முடித்துக்கொண்டு, எப்போது வெளிநாடு திரும்புவார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. பிப்ரவரி முதல் வாரத்தில் அவர் நாடு திரும்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம், இன்று இரவு விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திப்பார் என்றும், அப்போது தனது பயண திட்டம் தொடர்பான விவரத்தை அவரே விளக்க வாய்ப்புள்ளதாகவும் அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பயணத்தின் போது, முதலமைச்சரின் தனிச் செயலர் முருகானந்தம், தொழில்துறைச் செயலர் அருண்ராய் உள்ளிட்டோர் உடன் செல்கின்றனர்.



