lok sabha election result 2024:இது வெறும் டிரெய்லர் தான்.. மோடியின் பின்னடைவை விமர்சித்த ஜெய்ராம் ரமேஷ்!

Advertisements

புதுடெல்லி: “தற்போதைய பிரதமர் (முன்னாள் பிரதமர்) ஆகப் போகிறார் என்பதை இந்தப் போக்குகள் காட்டுகின்றன” எனக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாகச் சாடியுள்ளார். முன்னதாகக் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி பின்னடைவை சந்தித்ததை சுட்டிக்காட்டும் விதமாக இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் களமிறக்கப்பட்டார். பிரதமர் மோடி கடந்த முறையும் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் எளிதில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதை மெய்பிக்கும் விதமாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் மோடி முன்னிலை பெற்றார். ஆனால் அடுத்த சுற்றில் பிரதமர் மோடி திடீர் பின்னடைவை சந்தித்தார். அதாவது, காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து இருந்தார். தற்போதைய நிலவரப்படி மோடி முன்னிலை பெற்றுள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், இதைக் கடுமையாகச் சாடியுள்ள, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “தற்போதைய பிரதமர் (முன்னாள் பிரதமர்) ஆகப் போகிறார் என்பதை இந்தப் போக்குகள் காட்டுகின்றன.இது பிரதமருக்கு அரசியல் தோல்வி மட்டுமல்ல, தார்மீக தோல்வியாகத் தெரிகிறது. பிரதமர் தனது சொந்த தொகுதியிலிருந்து பின்தங்குவது இதற்கு முன் நடந்ததில்லை. வாரணாசியின் போக்குகள் வெறும் டிரெய்லர் மட்டுமே…” எனத் தெரிவித்துள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *